
நடப்பு நிகழ்வுகள் - தமிழ்நாடு
- ரூ.10 ஆயிரம் கோடியில் சேலம் - சென்னை புதிய 8 வழி பசுமை சாலை விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
நடப்பு நிகழ்வுகள் - இந்தியா
16 வருடங்களாக நடைமுறையிலிருந்த 'ஐ-டிக்கெட்' முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரயில்வே
- இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பின் மூலம் டிக்கெட் முன்பதிவுக்கு கடந்த 16 வருடங்களாக நடைமுறையிலிருந்த 'ஐ-டிக்கெட்' முறை, மார்ச் 1-ஆம் தேதி முதல் செயல்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- ரயில் பிரயாணம் செய்வதற்கு என்று இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், தங்களுக்கான பயணச்சீட்டுகளை வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் ஐ-டிக்கெட்' முறையை ரயில்வே கடந்த 2002-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
சந்திரயான்-2 ஏப்ரலில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
- நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் வரும் ஏப்ரலில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) தலைவர் சிவன் தெரிவித்தார்.
இஸ்ரோ இந்த ஆண்டு அனுப்பவுள்ள செயற்கைகோள் விவரம்
- மார்ச் இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
- கடல்சார் போக்குவரத்து உதவக் கூடிய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.- 1ஐ என்ற செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
- விண்ணிலிருந்து தகவல்களை மிகத் தெளிவாக பெறக் கூடிய வகையிலான ஜி-சாட் 11 என்ற செயற்கைக்கோள், ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து விண்ணில் ஏவப்படும்.
மீனவர்களுக்குச் செயலி: இஸ்ரோ
- மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்வளம் குறித்து தெரிவிக்கக் கூடிய வகையிலான கருவியை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்தக் கருவி அளிக்கும் விவரங்கள், செயலி மூலம் மீனவர்களுக்குத் தெரிவிக்கப்படும். முதல்கட்டமாக தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு இந்தச் செயலியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவடையும்.
- பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை ஒட்டியுள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் வேலி இல்லாத இடங்களில் வேலி அமைக்கும் பணிகள் இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநர் கே.கே.சர்மா கூறினார்.
கோவாவில் பரவும் குரங்கு காய்ச்சல்: 35 பேர் பாதிப்பு
- கோவா மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் எனும் விநோத காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலினால் அந்த மாநிலத்தில் 35 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்
நடப்பு நிகழ்வுகள் - உலகம்
தஸ்லிமாவின் தடை செய்யப்பட்ட புத்தகம் ஆங்கில மொழியில் விற்பனை: "ஸ்பிளிட்: ஏ லைப்'
- மேற்கு வங்க அரசால் கடந்த 2003ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனின் "துவிகண்டிதோ' புத்தகமானது, ஆங்கில மொழியில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
"துவிகண்டிதோ' புத்தக தடையின் முழு விவரம்
- மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி கடந்த 2003ஆம் ஆண்டில் புத்தகத்தில் இருக்கும் கருத்துகள், முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்துவது போல் இருப்பதாக குற்றம்சாட்டி, அந்த புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
- இந்த புத்தகம் மீதான தடையை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் 2005ஆம் ஆண்டில் நீக்கியது.
- இந்நிலையில், அந்தப் புத்தகமானது, ஆங்கில மொழியில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த புத்தகத்தின் பெயர், "ஸ்பிளிட்: ஏ லைப்' ஆகும்.
உலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்களின் பட்டியல் வெளியீடு:
- உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடா நகரங்கள் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.
உலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்களின் பட்டியலில் முதல் பத்து நகரங்கள்
வரிசை | ஆபத்தான நகரம் |
---|---|
முதலிடம் | லாஸ் கபோஸ் (மெக்சிகோ) |
இரண்டாம் இடம் | கராகஸ் (வெனிசுலா) |
மூன்றாம் இடம் | அகாபுல்கோ (மெக்சிகோ) |
நான்காம் இடம் | நடால் (பிரேசில்) |
ஐந்தாம் இடம் | டிஜூவானா (க்சிகோ) |
ஆறாம் இடம் | லாபாஷ் (மெக்சிகோ) |
ஏழாம் இடம் | போர்டாலிஷா (பிரேசில்) |
எட்டாம் இடம் | விக்டோரியா (மெக்சிகோ) |
ஒன்பதாம் இடம் | குயானா (பிரேசில்) |
பத்தாம் இடம் | பிலீம் (பிரேசில்) |
13-வது இடம் | செயிண்ட் லூயிஸ் (அமெரிக்கா) |
ஜீ ஜின்பிங் நிரந்தர அதிபராவதற்கான சட்டத் திருத்தம்
- அதிபர் பதவியில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே தொடர முடியும் என்ற பழைய நடைமுறையை மாற்றுவதற்கான சட்டத் திருத்தத்துக்கு சீன நாடாளுமன்றம் 11.03.2018 அன்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம், ஜீ ஜின்பிங் சீனாவின் நிரந்தர அதிபராக பதவி வகிப்பதற்கான தடை விலகியுள்ளது.
குறிப்பு: சீன அதிபர் பதவி வரன்முறை
- சீனாவில் அதிபர் அல்லது துணை அதிபர் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை முறைக்கு மேல் அந்தப் பதவிகளில் நீடிக்க முடியாது என்று அந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிகழ்வுகள்: வணிகம் - பொருளாதாரம்
அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.27.35 லட்சம் கோடியாக உயர்வு: ரிசர்வ் வங்கி
- நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ரூ.27.35 லட்சம் கோடியாக (42,075 கோடி டாலர்) அதிகரித்தது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
விளையாட்டு - நடப்பு நிகழ்வுகள்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் அகில் ஷியோரனுக்கு தங்கம்
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் இளம் வீரர் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தங்கம் வென்ற 4-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அகில் பெற்றுள்ளார். மெக்ஸிகோவில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவுக்கு இது 5-ஆவது தங்கமாகும்.
பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் - வாய்ப்பு
- போட்டி நிறைவில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ய வாய்ப்புள்ளது. அது நிகழும் பட்சத்தில், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
அரசுக்கு ஒத்துழைக்க பத்ரா தலைமையில் குழு
- இந்திய விளையாட்டுத் துறையின் நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும், இந்திய விளையாட்டு ஆணையத்துக்கும் (சாய்) ஒத்துழைக்கும் வகையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அதற்கான தலைவராக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா செயல்படவுள்ளார்.
- தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் (என்எஸ்எஃப்), மாநில ஒலிம்பிக் சங்கம் (எஸ்ஓஏ) மற்றும் விளையாட்டு விதிகள் உள்ளிட்ட விவகாரங்களைக் கையாளுவதில் அரசுக்கும், "சாய்'க்கும் இந்தக் குழு உதவும்.