காவிரி நடுவர் மன்றத் தலைவர் ஏ.எம்.சாப்ரே
காவிரி நடுவர் மன்றத்தின் புதிய தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் மனோகர் சாப்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக டி.எஸ்.தாக்குர் இருந்த போது மத்திய அரசுக்கு செய்த பரிந்துரை கவனிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், டி.எஸ்.தாக்குரின் பரிந்துரையை மீண்டும் தனது தரப்பு பரிந்துரையாக தற்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மத்திய அரசுக்கு முன்மொழிந்தார். இதை ஏற்று, நீதிபதி ஏ.எம்.சாப்ரேவை காவிரி நடுவர் மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கும் அறிவிக்கையை மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் கடந்த 16-ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிக்கையை ஊடகங்களிடம் மத்திய அரசு திங்கள்கிழமை பகிர்ந்து கொண்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விரைவில் காவிரி நடுவர் மன்றத்தின் தலைவர் பொறுப்பை நீதிபதி ஏ.எம்.சாப்ரே ஏற்றுக் கொள்வார் என்று மத்திய நீர் வளத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ருவாண்டா-இந்தியா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ருவாண்டா சென்றுள்ள குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, அந்நாட்டு அதிபர் பால் ககாமேவை, தலைநகர் கிகாலியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, விமானப் போக்குவரத்து, விசா நடைமுறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
விண்வெளி நிலையத்தை இந்தியா உருவாக்கும்: இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்
விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார். அண்மையில் ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, அவை அனைத்தையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது. ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான அனைத்துத் திறன்களும் நம்மிடம் உள்ளன. அவ்வாறு அந்த நிலையத்தை அமைப்பது என்ற முடிவை அரசு எடுத்தால் நாங்கள் அதற்கான பணிகளில் இறங்குவோம் என்றார் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.
இந்தியா - பாக் இடையே அணு ஆயுத விபத்து முன்னெச்சரிக்கை ஒப்பந்தம் நீட்டிப்பு
- அணு ஆயுத விபத்துகள் குறித்து முன்னெச்சரிக்கை தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2007-ஆம் ஆண்டு இருநாடுகளும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இருநாடுகளும் வைத்துள்ள அணு ஆயுதங்கள் எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி வெடித்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியம்.
- இதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2007-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2017 பிப்ரவரி 20-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க இருநாடுகளும் இணைந்து முடிவெடுத்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராக் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் உத்தேசமில்லை
இராக்கில் உள்ள எண்ணெய் வளத்தைக் கைப்பற்றும் உத்தேசம் அமெரிக்காவுக்கு இல்லை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் திங்கள்கிழமை தெரிவித்தார். ஜெர்மனியில் சர்வதேச பாதுகாப்புத் துறை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, இராக் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இன்று (21.02.2017) பதவியேற்பு
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார்.
முன்னதாக தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து, டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த என்.சந்திரசேகரன் (54) புதிய தலைவராக கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தலைவராக தற்போது பொறுப்பேற்கிறார்.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்: புதிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்
அரசு காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பிரீமியர் மெடிக்ளெய்ம் என்ற புதிய மருத்துவக் காப்பீட்டை திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. சென்னையில் அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.ஸ்ரீநிவாசன் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பிரீமியர் மெடிக்ளெய்ம்' என்ற புதிய மருத்துவக் காப்பீட்டை தனி நபர் அல்லது குடும்பத்தினர் எடுத்துப் பயன் அடையலாம். குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையில் மருத்துவக் காப்பீடு செய்யலாம்; 18 வயது முதல் 65 வயது வரை உள்ளோர் இந்த மருத்துவக் காப்பீட்டை எடுத்துப் பயன் பெறலாம். 3 மாத குழந்தை முதல் 18 வயதுக்குட்பட்டோர் பெற்றோருடன் இணைந்தும், புதிதாக பிறந்த குழந்தை - தாய் இணைந்து இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டை எடுத்துப் பயன் பெறலாம்.
ரயில்வேக்கு சொந்தமான 3 பொதுத் துறை நிறுவனங்களை பட்டியலிட ஆயத்தம்
ரயில்வே துறைக்கு சொந்தமான மூன்று பொதுத் துறை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான நடைமுறைகளை மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை (20.02.2017) தொடங்கியது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சாகித் அப்ரிடி ஓய்வு
பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி(36) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2010-இல் ஓய்வு பெற்றுவிட்டார். இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் தனது 21 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்வதாக அவர் அறிவித்தார்.
ஐபிஎல் ஏலம்: தமிழக வீரர் நடராஜன் ரூ. 3 கோடிக்குத் தேர்வு
தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி
ஐபிஎல் ஏலம்: ரூ. 14.5 கோடிக்கு ஸ்டோக்ஸைத் தேர்வு செய்தது புணே
10-ஆவது ஐபிஎல் சீசனுக்காக நடைபெறும் இந்த ஏலத்தில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதிலிருந்து அனைத்து அணிகளும் சேர்ந்து அதிகபட்சம் 76 வீரர்களை வாங்க முடியும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 27 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸை ரூ. 14.5 கோடிக்கு ஏலத்துக்கு எடுத்துள்ளது புணே அணி. அதேபோல மார்கனை ரூ. 2 கோடிக்கு பஞ்சாப்பும் கூரே ஆண்டர்சனை ரூ. 1 கோடிக்கு தில்லியும் பவன் நெகியை ரூ. 1 கோடிக்கு பெங்களூரும் ஏஞ்சலோ மேத்யூஸை ரூ. 2 கோடிக்கு தில்லியும் ஏலத்தில் தேர்வு செய்துள்ளன.
Post a Comment